Pages

0 TNPSC குரூப் - 4 தேர்வு : 10 ஆயிரம் அரசு வேலைகள்






தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் 10,718 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணிகளில் சேர எஸ்எஸ்எல்சி படித்திருந்தால் போதும். இதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், வரி தண்டலர் (பில் கலெக்டர்), தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்-நிலை-3, நில அளவர் (ஃபீல்ட் சர்வேயர்), வரைவாளர் (டிராப்ட்ஸ்மேன்) ஆகிய பணிகளில் உள்ள 10,718 காலிப் பணி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுகளை நடத்துகிறது.

இந்தத் தேர்வை எழுத விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெறாதவர்கள் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது. தட்டச்சர் பணிக்கு அரசு தொழில்நுட்ப தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-3 பணிக்கு அரசுத் தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலையில் தேர்ச்சி முதுநிலையில் தேர்ச்சிக்குச் சமமானதாகக் கருதப்படாததால் இடைநிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இடத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டர் தகுதி (தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையில் வழங்கப்படும், Certificate course in Computer on office Automation’ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கம்ப்யூட்டர் தகுதியைப் பெறாத விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால், அவர்களின் தகுதிகாண் பருவத்திற்குள் மேற்குறிப்பிட்ட கம்ப்யூட்டர் தகுதியைப் பெற வேண்டும். நில அளவர் பணியைப் பொருத்த அளவில் அனைத்துத் தகுதிகளும் சமமாக இருக்கும் பட்சத்தில் தொழில் பயிற்சி நிலையத்தில் நில அளவர் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்துக் காலிப் பணியிடங்களிலும் 20 சதவீத இடங்கள், தமிழ் வழியில் படித்தவர்களைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்தத் தேர்வை எழுத விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18. ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள்) 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் உள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் அவர்களது அதிகபட்ச வயது 35க்குள் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டவகுப்பினர்,  பிற்படுத்தப்பட்ட   வகுப்பினர் (முஸ்லிம்கள்) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதியைக் காட்டிலும் மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருந்தால் அதாவது புதுமுக வகுப்பு, மேல்நிலைப் பள்ளி, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. மாநில, மத்திய அரசுப்பணிகளில் முறையாக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஏனையோர் இந்தப் பணிகளில் சேர  விண்ணப்பிக்க முடியாது. டான்சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஆட்குறைப்புக்கு உள்ளான தொழில்நுட்பத் தகுதியுள்ள மற்றும் தொழில்நுட்பத் தகுதியில்லாத பணியாளர்கள், அரசு, கழகங்கள் மற்றும் அரசின் ஆளுகைக்குட்பட்ட நிறுவனங்களில் இதுவரை பணியில் அமர்த்தப்படாமல் இருப்பவர்கள் இந்தப் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு தவிர அனைத்துத் தகுதிகளும் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு வயது வரம்பை அரசு தளர்த்தும்.

அறிவிக்கப்பட்ட காலிப் பணி இடங்களின் எண்ணிக்கை தோராயமானது. காலி இடங்களின் நிலைமைக்கு ஏற்ப எந்த நேரத்திலும் காலி இட மதிப்பீட்டில் மாறுதல் இருக்கலாம். தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கிடைக்காவிட்டால் அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட காலி இடங்கள் அதே பிரிவைச் சேர்ந்த  ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும். இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின்கீழ் வரும் காலிப் பணி இடங்களுக்கு இந்து சமயத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் இல்லாத நிலையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட காலிப் பணி இடங்கள் நடைமுறையில் உள்ள விதிகளின்படி நிரப்பப்படும். ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் நிரப்பப்பட்ட பிறகும் (அவ்வகுப்பைச் சேர்ந்தவர்களில்) தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இருந்தால் அந்த விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டிலும் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள். அருந்ததியர்களுக்காக ஒதுக்கப்பட்ட காலிப் பணி இடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கிடைக்காத நிலையில், அந்தப் பணி இடங்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

இந்தப் போட்டித் தேர்வு எப்படி இருக்கும்?

இத்தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். வினாத்தாளில் இரண்டு பிரிவுகள் இருக்கும். அதாவது பொது அறிவுப் பிரிவில் 100 வினாக்கள் கேட்கப்படும். அடுத்த பிரிவில் பொதுத் தமிழிலோ அல்லது பொது ஆங்கிலத்திலோ 100 கேள்விகள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றுக்குப் பதிலளிக்க வேண்டும். பொது அறிவு வினாத்தாள், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பொதுத் தமிழ் வினாத்தாள் தமிழிலும் பொது ஆங்கில வினாத்தாள் ஆங்கிலத்திலும் இருக்கும். இதற்கான பாடத்திட்டம் குறித்த விவரங்கள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அண்மையில் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பங்களை ஸ்கேன் செய்து அதன் நகல்களை சிடி அல்லது பென் டிரைவ் போன்றவற்றில் தயாராக வைத்திருக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தைப் பதிவு செய்ய சரியான இ-மெயில் முகவரியோ அல்லது மொபைல் போன் எண்ணோ அவசியமானது. இ-மெயில் முகவரி பயன்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை மற்றும் குறிப்பாணை போன்றவை விண்ணப்பதாரர்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் பதவி, இனம், பிறந்த நாள், முகவரி, இ-மெயில் முகவரி, தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இறுதியானதாகக் கருதப்படும். இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளுக்குப் பிறகு, எந்தவித மாறுதலும் செய்ய அனுமதி கிடையாது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் முக்கிய விவரங்களை பின்னர் மாற்ற முடியாது என்பதால் விண்ணப்பத்தை நிரப்பும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். குறுஞ்செய்தி மூலம் தகவல்களைப் (எஸ்எம்எஸ்) பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை அணுகி ‘அப்ளை ஆன்லைன்’ என்ற பகுதியை ‘கிளிக்’ செய்தால் ஆன்லைன் விண்ணப்பம் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவி அல்லது பணித் தொகுதியைத் தேர்வு செய்யவும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு முறையின் (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்) மூலம் பிரத்யேக எண் பெற்றிருந்தால் அந்த எண்ணையும் கடவுச் சொல்லையும் (பாஸ்வேர்டு) பதிவு செய்து ஏற்கெனவே உள்ள விவரங்களைக் காணவும். தேவையானால் தகுந்த மாறுதல் செய்யலாம். நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்து பிரத்யேக எண்ணைப் பெற்றிருக்காவிட்டால் தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தையும் கையெழுத்தையும் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் மற்றும் கையெழுத்து இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அனைத்துப் பணிகளுக்கும் தேர்வுக் கட்டணம் ரூ.75. விண்ணப்பக் கட்டணம் ரூ.50. அதாவது மொத்தக் கட்டணம் ரூ.125. தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு கோரும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவக் கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கெனவே பதிவு செய்து 50 ரூபாய் பதிவுக் கட்டணமாகச் செலுத்தி பதிவு எண்  பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், 5 ஆண்டுகளுக்கு தேர்வாணையம் அறிவிக்கும் எந்தப் பணிக்கும் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்தலாம். இதற்காக இணைய தளத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றிக் கட்டணத்தைச் செலுத்தவும். கட்டணம் தொடர்பான விவரங்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் நிரப்பிய உடன் செர்வரிலிருந்து தகவல் வரும் வரை காத்திருக்கவும். இரட்டிப்பாக பணம் செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில் பேக் (back) அல்லது ‘ரெப்ரஷ்’ பட்டனை அழுத்த வேண்டாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து முடித்ததும் ஒரு பதிவு எண்ணும் கடவுச் சொல்லும் (பாஸ்வேர்டு) வழங்கப்படும். எதிர்கால தொடர் பயன்பாட்டுக்காக இவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நேரடியாகக் கட்டணம் செலுத்த விரும்பும் விண்ணப்ப தாரர்கள் குறிப்பிட்ட அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கிக் கிளைகளில் செலுத்தலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பதிவு எண்ணும் பாஸ்வேர்டும் வழங்கப்படும். இதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடன் தோன்றும் செலுத்துச் சீட்டை (செலான்) பிரிண்ட் அவுட் எடுத்து அருகில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைக்கோ அல்லது குறிப்பிட்ட அஞ்சலகத்திற்கோ சென்று கட்டணத்தைச் செலுத்தவும். பின்னர், செலானை வாங்கி , அதில் கையெழுத்து இடப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். டிரான்ஸாக்‌ஷன் எண், வங்கிக் கிளையின் பெயர், டி.பி. குறியீட்டு எண், பணம் செலுத்திய நாள் ஆகியவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு வேலை நாட்களுக்குள் அஞ்சலகத்திலோ அல்லது இந்தியன் வங்கியிலோ கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே விண்ணப்பதாரரின் விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படும்.

தேவைப்பட்டால், பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவோ பிரிண்ட் அவுட் எடுக்கவோ முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் பிரிண்ட் அவுட்டையோ அல்லது தொடர்புடைய ஆவணங்களையோ தேர்வாணையத்துக்கு அனுப்பத் தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத்துக்கு தகுதி பெறும் நிலையில் மட்டுமே அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது. விண்ணப்பதாரர்கள் தனியே இ-மெயில் முகவரி வைத்திருக்க வேண்டும். அத்தகைய இ-மெயில் முகவரி இல்லாத விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிப்பதற்கு முன்பாக தங்களுக்கு என தனியே ஒரு இ-மெயில் முகவரியை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ளும் வகையில் ஆன்லைன் விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பத்தில் மாறுதல் எதுவும் செய்ய வேண்டியதிருந்தால் பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் வரை மாறுதல் செய்துகொள்ளலாம். இறுதி நாளுக்குப் பிறகு எத்தகைய மாறுதல்களும் செய்ய இயலாது. தேர்வுக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணங்கள் குறித்த விவரங்களை அதற்குரிய கட்டத்தில் கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் மாறுதல் செய்யவோ திருத்தவோ முடியாது. விண்ணப்பத்தில் உள்ள அனைத்துக் கட்டங்களையும் பூர்த்தி செய்த பிறகு, அனைத்தையும் சரியாகப் பூர்த்தி செய்திருக்கிறோமா என்று பார்த்த பிறகே சப்மிட் என்ற பொத்தானை இறுதியாக அழுத்த வேண்டும். தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு, வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 1860 345 0112 என்ற கட்டணமில்லா சேவை உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கும் வசதிச் சேவை மே 28ம் தேதி இரவு 11.59க்கு நிறுத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில்  செயல் அலுவலர் கிரேடு-4 பணிக்கு குரூப்-8 தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தொகுதி-4 மற்றும் தொகுதி-8 ஆகிய இரு தொகுதிகளிலும் அடங்கிய பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பதாரர்கள் ஜூலை 7ஆம் தேதி முற்பகலில் நடைபெறும் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தாள் தேர்வை எழுதுவதோடு அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறும் இந்து மதத்தாள் தேர்வையும் எழுத வேண்டும். இவ்வாறு இரண்டு தேர்வுகளையும் எழுதியவர்கள் மட்டுமே தொகுதி-4 மற்றும் தொகுதி-8 ஆகியவற்றுக்கான பணிகளுக்கு பரிசீலனை செய்யப்படுவார்கள். தொகுதி-8 தேர்வுக்கு மட்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100. தொகுதி-4 மற்றும் தொகுதி-8 ஆகிய இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பவர்களுக்குக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் பார்த்து முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியில் சேருவதில் ஆர்வமிக்கவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச்  சமர்ப்பிக்க  கடைசி நாள்: 28-05-2012
வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 30-05-2012
தேர்வு நடைபெறும் நாள்: 07-07-2012
விவரங்களுக்குwww.tnpsc.gov.in, www.tnpscexams.net

                                               நன்றி : புதிய தலைமுறை
                                      

[Read More...]


0 ஆந்திரா வங்கியில் காலி இடங்கள்




பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கிக்கான அடித்தளம் 1923ல் இடப்பட்டது. பின்னர் இந்த வங்கி 1969ல் தேசியமயமாக்கப்பட்டது. இந்த வங்கிக்கு இந்தியா எங்கும் கிளைகள் உள்ளன. இந்த வங்கில் கிளரிக்கல் பதவியில் தமிழ் நாட்டில் உள்ள 30 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

 தேவை: 


ஆந்திரா வங்கியின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாகப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், கடந்த ஆண்டு ஐ.பீ.பி.எஸ்., நடத்திய பொது எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு இத் தேர்வில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எந்த மாநிலத்தில் உள்ள காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கிறோமோ, அந்த மாநில மொழியில் திறன் பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்., ஆபிஸ் உள்ளிட்ட கம்ப்யூட்டர் பிரிவில் நல்ல தேர்ச்சி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் பணி புரியத்தயாராக இருப்பதுடன், குறைந்த பட்சம் அந்த மாநிலத்தில் 5 வருட காலத்திற்கு மாற்றம் எதுவுமின்றி பணி புரிய வேண்டியிருக்கும்.

பிற தகவல்கள்


எழுத்துத் தேர்வின் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் 24 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சார்ந்தவர்கள் குறைந்த பட்சம் 21 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆந்திரா வங்கியின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.150/-ஐ ஏதாவது ஒரு ஆந்திரா வங்கிக் கிளையிலோ அல்லது என்.இ.எப்.டி., மூலமாகவோ செலுத்த வேண்டும்.
இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப் படும். இந்த நேர்காணல் தமிழ் நாட்டில் சென்னையில் நடத்தப்பட உள்ளது. முழுமையான தகவல்களைப் பெற இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.


விண்ணப்பிக்க இறுதி நாள் : 05.05.2012

இணையதள முகவரி : www.andhrabank.in/

[Read More...]


0 சச்சின் The Best 100





சச்சின் 100


1.சச்சினுடைய அப்பாவுக்கு எழுபதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் (எஸ்.டி.பர்மன்!) என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால், தன் பிள்ளைக்கு சச்சின் எனப் பெயரிட்டார்.

2.அதிவேக கார்கள் மீது அளவில்லாத ஆர்வம் கொண்டவர். அதிகாலை நான்கு மணிக்கு மும்பையின் சாலைகளில் தன்னந்தனியாக கார் ஓட்டிக்கொண்டிருப்பாராம்.

3.சச்சின் பள்ளியில் படிக்கும்போது சுனில் கவாஸ்கர் கால்களுக்கான பேட்கள் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். சச்சின் 1989ல் தன் முதல் டெஸ்ட் போட்டியில் அந்த பேட்களை அணிந்துகொண்டுதான் களம் இறங்கினார்.

4.சிறு வயதில் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கென்ரோவின் தீவிர விசிறியாக இருந்தார் சச்சின். மெக்கென்ரோவைப்போலவே தானும் குடுமி வைத்துக்கொண்டு சுற்றுவாராம். அதனாலேயே, அவருடைய நண்பர்கள் அவரை மேக் என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.

5.டெஸ்ட் போட்டிகளில் தன்னை அவுட் செய்கிற ஒவ்வொரு பந்து வீச்சாளரின் பெயரையும் அவர் எப்படி தன்னை அவுட் செய்தார் என்பதையும் மறக்கவே மாட்டார். தூங்கும்போது எழுப்பிக் கேட்டாலும் டாண் என்று சொல்லி விடுவாராம்.

6.பள்ளி அணிக்காக ஆடும்போது ஒரு ரப்பர் பந்தை தண்ணீரில் நனைத்து, அதைப் பந்து வீச்சாளரிடம் கொடுத்து பந்துவீசச் சொல்லி பயிற்சி எடுப்பாராம். பந்து, பேட்டின் எந்த இடத்தில் படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை சரிசெய்து கொள்ள இந்த உத்தியாம்.

7.1987ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதிப்போட்டியில், பவுண்டரியில் நின்று பந்து பொறுக்கிப்போடும் பால் பாயாக பணியாற்றினார் சச்சின்.

8.ரன் அவுட் ஆகும்போது தேர்ட் அம்பயர் (டி.வி.அம்பயர்) மூலமாக முதன் முதலாக அவுட் ஆனவர் நம்ம சச்சின்தான்!

9.1998ல் ஆஸ்திரேலியாவோடு இந்தியா விளையாடியது. அப்போது வார்னே ஒரு பேட்டியில், ‘அந்தாளு கனவுல கூட டார்ச்சர் குடுக்கறார்ப்பா... நான் போடற எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்கிற மாதிரி கனவு வந்து தூக்கத்தைக் கெடுக்குது’ எனக் கூறியிருந்தார்.

10.நிறைய உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவர் சச்சின்.

11.சச்சினுடைய முதல் பேட்டினைப் பரிசளித்தவர் அவருடைய அக்கா! காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர், அங்கிருந்து வாங்கி வந்த பேட் உடையும் வரை உபயோகித்தாராம் சச்சின்.

12.1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. அதன் நான்காவது டெஸ்ட் போட்டிதான் முதன்முதலாக சிறுவன் சச்சின் மைதானத்தில் பார்த்த நிஜ கிரிக்கெட்! அவர் மைதானத்திற்கு சென்ற நாளில் விவியன் ரிசர்ட்ஸ், செஞ்சுரி அடித்தார்.

13.சச்சின் குட்டிப்பையனாக இருந்தபோது குறும்புத்தனம் தாங்க முடியாதாம். மாங்கா பறிக்கப்போய் தவறி விழுந்தவருக்கு தண்டனையாக கிரிக்கெட் கோச்சிங்பயிற்சியில் சேர்த்துவிட்டார் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர். அதுதான் சச்சினின் வாழ்க்கையையே மாற்றியது.

14.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் சர்.டான் பிராட்மேனுக்கு, அடுத்த இடம் நம்ம சச்சினுக்கு.

15.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச் சிறந்த ஒருநாள் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் விவியன் ரிசர்ட்ஸ், இரண்டாமிடம் நம்மாளு!

16.பள்ளிக்காலத்திலேயே சச்சின், மும்பையில் இருந்த பதின்மூன்று அணிகளுக்காக விளையாடினார்.

17.17 வயதிற்குட்பட்டோருக்கான ஹாரிஷ் ஷீல்ட் என்னும் உள்ளூர்ப் போட்டியில்தான் சச்சின் தன் முதல் கிரிக்கெட் சதத்தினை அடித்தார்!

18.மும்பையிலிருந்து வெளிவரும் ‘மிட் டே’ நாளிதழ், சச்சினின் முதல் பேட்டியைப் பிரசுரித்தது. அப்போது அவருக்கு வயது 12! பேட்டியின் பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவர், அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர்.

19.சச்சினும் காம்ப்ளியும் பள்ளி அணிக்காக ஆடி, இருவருமாக சேர்ந்து எடுத்த 664 ரன்கள், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

20.1988ல் குஜராத் அணிக்கெதிராக தன் முதல் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார் சச்சின். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து, இளம் வயதில் முதல் போட்டியில் சதமடித்த வீரர் என்கிற சாதனையைச் செய்தார்.

21.சர்.டான் பிராட்மேன் தன்னுடைய உலக டெஸ்ட் அணிக்கான பட்டியலில் சேர்த்துக்கொண்ட ஒரே இந்தியர் சச்சின் மட்டும்தான்.

22.தனது பத்தொன்பதாவது வயதில், 1992ம் ஆண்டு தன் முதல் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடினார் சச்சின்.

23.சச்சினுடைய மனைவி பெயர் அஞ்சலி. சச்சின் தம்பதிக்கு ஒரு மகள் சாரா, ஒரு மகன் அர்ஜூன்.

24.சச்சின் தனது முதல் எழுபது ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாகவே விளையாடினார்!

25.130 ஆண்டு கால பாரம்பரியமிக்க இங்கிலாந்தின் கவுண்டி அணியான யார்க்சயர் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் சச்சின்தான். கவுண்டி அணிக்காக ஆடுவதா, வேண்டாமா என கவாஸ்கரிடம் சென்று அனுமதி வாங்கிவிட்டுத்தான் விளையாடினார் சச்சின்.

26.1995ல் மும்பையில் நடந்தது சச்சினின் திருமணம். அவருடைய மனைவி அஞ்சலியைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார். அஞ்சலி ஆங்கிலோ இந்தியப் பெண். அவருக்கு சச்சினை விட ஐந்து வயது அதிகம்.

27.தன் மனைவி அஞ்சலியை திருமணத்திற்குமுன் தீவிரமாகக் காதலித்தார் சச்சின். அப்போது ஓரளவு பிரபலமாகிவிட்டதால், ஒட்டுத்தாடி, தொப்பி, கண்ணாடி சகிதம் காதலியோடு பார்க், பீச், தியேட்டர்களில் சுற்றுவாராம்!

28.சச்சினின் குழந்தை முகம்தான் குழந்தைகள் டாக்டரான அஞ்சலியைக் கவர்ந்திருக்க வேண்டும் என கவாஸ்கர் ஒரு பேட்டியில் கிண்டலாகக் கூறியுள்ளார்.

29.இந்தியாவின் முக்கிய உள்ளூர்ப் போட்டிகளான ரஞ்சிக் கோப்பை, துலீப் டிராபி, இரானி டிராபி என மூன்று போட்டிகளிலும் தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் மட்டும்தான்.

30.சச்சின் உலக கிரிக்கெட் வரலாற்றில் தன் முதல் சதத்தினை பதிவு செய்தபோது அவருக்கு வயது பதினேழுதான்! இங்கிலாந்து மான்செஸ்டர் ஓல்டு டிரப்ஃபோர்ட் மைதானத்தில் 1990ல் தொடங்கியது செஞ்சுரி வேட்டை.

31.சுதீர்குமார் கௌதம், சச்சின் தெண்டுல்கரின் நம்பர் ஒன் ரசிகர்என அழைக்கப்படுபவர். சச்சின்விளையாடுகிற எல்லா ஆட்டங்களிலும் கலந்து கொள்ளும் இவருக்கு, சச்சினே தன் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் கொடுத்து விடுகிறார்.

32.சென்னையைச் சேர்ந்த 87 வயது சரஸ்வதி என்கிற பாட்டிதான் சச்சினுடைய வயதில் மூத்த ரசிகர்எனச் சொல்லப்படுகிறது. சச்சினைப்பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறார் இந்த சச்சின் பாட்டி!

33.டுவிட்டர் இணையதளத்திலும் சச்சின்அவ்வப்போது ரசிகர்களோடு உரையாடுகிறார். அவருக்கு டுவிட்டரில் 23 லட்சம் ரசிகர்கள்! https://twitter.com/sachin_rt

34.விளம்பரங்களில் நடிப்பதிலும் செஞ்சுரி அடித்து சாதனை படைத்தவர் சச்சின். நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்களுக்கான விளம்பரங்களில் நடித்திருக்கிறார் சச்சின்.

35.சச்சினின் செல்லப்பெயர் டென்ட்லியா! அதுபோக லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் சாம்பியன், கிரிக்கெட்டின் கடவுள் என்றெல்லாம் கூட அவருடைய ரசிகர்கள் அழைக்கின்றனர்.

36.சச்சின் ஒரே ஒரு பாலிவுட் படத்தின், ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். 2003ம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் ‘ஸ்டம்ப்ட்’.

37.திகார் ஜெயிலில் இருக்கிற இரண்டு வார்டுகளுக்கு, கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஒன்று,வினோத் காம்ப்ளியின் பெயரில். இன்னொன்று, சச்சினின் பெயரில்!

38.இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பதவி வழங்கிய விமானப் பயிற்சி பெறாத ஒரே ஆள் சச்சின் மட்டும்தான்.

39.ஹாக்கி வீரர் தியான் சந்த்துக்குப் பிறகு,இந்தியாவில் விளையாட்டுக்காகத் தரப்படுகிற எல்லா விருதுகளையும் வென்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்.

40.சச்சின்தான் உலகிலேயே அதிக எடை கொண்ட கிரிக்கெட் பேட்டினைப் பயன்படுத்துகிறார். அவருடைய பேட்டின் எடை 1.42 கிலோ! சாதாரண பேட்டின் எடை ஒரு கிலோதான்!

41.சச்சின் பந்து வீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் வலது கையையே பயன்படுத்தினாலும் அவர் எழுதுவதும், சாப்பிடுவதும் இடது கையில்தான்!

42.பத்து வயதில் வேகப்பந்து வீச்சாளர்ஆகவேண்டும் என்கிற ஆசையில், எம்ஆர்எஃப் பேஸ் ஃபவுண்டேஷனில் செலக்ஷனுக்காகச் சென்று, டென்னிஸ் லிலியின் அறிவுரையால் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

43.சச்சினுக்கு காயமெல்லாம் கமர்கட் மாதிரி! சின்ன வயதில் அவருடைய உடம்பில் பேண்ட் எய்டு எப்போதுமே இடம் பிடித்திருக்குமாம். அவர் முதன்முதலாக நடித்த விளம்பரமும் பேண்ட் எய்டுதான்!

44. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின்தான்.

45.டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் முத்தையா முரளீதரன்தான் சச்சினை அதிக முறை அவுட்டாக்கிய பெருமையைப் பெற்றவர் (எட்டு முறை).

46.ஒருநாள் போட்டிகளில் சச்சினை அதிக முறை அவுட்டாக்கியவர், ஆஸ்திரேலியாவின் அதிவேகப் பந்து வீச்சாளர் பிரட்லீ (9 முறை).

47.ஏகப்பட்ட மேட்ச்கள் ஆடியிருந்தாலும் சச்சின் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2006ல் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக!

48.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே இரட்டை  சதமடித்தவர் சச்சின்! ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் ஆளும் அவர்தான்.

49.ஒரு நாள் போட்டிகளில் ஆறு முறை 200க்கு அதிகமான பார்ட்னர் ஷிப்களில் பங்கு பெற்றுள்ளார். அவரோடு ஆடியவர்கள் இரண்டே பேர். ஒருவர் கங்குலி, இன்னொருவர் டிராவிட்.

50.மற்ற எந்த அணிகளையும் விட ஆஸ்திரேலியாவோடு விளையாடும்போது சச்சினுக்கு ஆக்ரோஷம் அதிகமாகி விடுகிறது. அவர் அடித்த நூறு நூறுகளில் இருபது, ஆஸியுடன்தான்.

51.கிரிக்கெட் புத்தகத்தின் எல்லாவகை ஷாட்டுகளும் விளையாடினாலும் சச்சினுக்குப் பிடித்தது ஸ்ட்ரைட் டிரைவ்தானாம்! (எங்களுக்கும்தான்!).

52.சச்சினுக்குப் பிடித்த கிரிக்கெட் மைதானம் மும்பை வான்கடேவும் ஆஸ்திரேலியாவின் சிட்னி எஸ்சிஜியும்தான்.

53.கடல் உணவுகளை விரும்பி உண்பாராம் சச்சின்! அதிலும் நண்டு மற்றும் மீன் என்றால், ஒரு பிடிபிடிப்பது சச்சினின் வழக்கம்.

54.சச்சினிடம் ராசியான பேட் ஒன்று இருந்தது. அதை வைத்து 14 நான்கு செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். அது உடைந்துபோக, வல்லுநர்களை வைத்து சரிசெய்து கடந்த உலகக் கோப்பை போட்டிகள் வரைக்குமே அதை உபயோகித்தாராம்!

55.சச்சின் கிரிக்கெட்டுக்கு வெளியே, இரண்டு உணவகங்களை மும்பையிலும் பெங்களூருவிலும் நடத்தி வருகிறார்.

56.சச்சின் தன் பள்ளிப்படிப்பைத் தொடங்கியது நியூ இங்கிலாண்ட் ஸ்கூலில்தான் என்றாலும் கிரிக்கெட்டுக்காக அவருடைய பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் உத்தரவின்படி சாரதாஸ்ரமம் வித்யா மந்திர் பள்ளியில் படித்தார்.

57.உலகம் முழுக்க இருக்கிற 90 கிரிக்கெட் மைதானங்களில் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார் சச்சின்!

58.சச்சின் கிரவுண்டில் விளையாடும் போது எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ மாட்டார் அவருடைய மனைவி அஞ்சலி! திருமணமானதிலிருந்து இதை விரதமாகவே கடைபிடிக்கிறார்.

59.நிறைய செண்டிமெண்ட் பார்ப்பாராம் சச்சின். எப்போதும் தன்னுடைய இடது கால் பேடையே முதலில் அணிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

60.மேடம் டுசாட்ஸ் என்கிற பிரபலமான மெழுகு சிலை மியூசியத்தில் அவரைப்போலவே ஒரு சிலைவைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் இடம் பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர் சச்சின்தான்!

61.கங்குலியோடு இணைந்து ஆறாயிரம் ரன்களை ஒப்பனிங் இறங்கிக் குவித்தது, கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்திடாத சாதனையாக கருதப்படுகிறது!

62.சச்சினை சூப்பர் ஹீரோவாக்கி, மாஸ்டர் பிளாஸ்டர் என்கிற பாத்திரத்தை உருவாக்கி காமிக்ஸ் ஒன்றை வெளியிட்டது விர்ஜின் காமிக்ஸ் என்னும் நிறுவனம்.

63.சச்சின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இக்கட்டான சூழல்களில் இந்தியாவுக்காகப் பந்து வீசி அசத்திஉள்ளார். டெஸ்ட்டிலும் ஒரு நாள் போட்டிகளிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்!

64.பத்தாயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்தபோது மும்பை கிரிக்கெட் அசோசியேஷன், சச்சினுக்கு பத்து கிலோ எடையுள்ள வெள்ளி பேட் ஒன்றை பரிசாகக் கொடுத்தது!

65. ‘டைம்’ இதழ், சச்சினை ஆசியாவின் ஹீரோ எனப் புகழ்ந்து எழுதியது!

66.உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்கிற சாதனை செய்துள்ளவர் சச்சின்.

67.சச்சினுக்கும் சென்னைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் செஞ்சுரி, சென்னைசேப்பாக்கத்தில்தான்! (இங்கிலாந்துக்கு எதிராக 165 ரன்கள்!)
.
68.1995ல் சச்சின், ஐந்தாண்டுக்கான விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்தத் தொகை என்ன தெரியுமா? 30 கோடி!

69.டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிற எல்லா அணிகளோடும் இரண்டுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்திருக்கிறார்.

70.2006ல் விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்தத் தொகை 180 கோடி! இதன் மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கிற விளையாட்டு வீரராக உயர்ந்தார்.

71.சச்சின் மூன்று முறை 99 ரன்களுக்கு அவுட்டாகியிருக்கிறார். 90-99 ரன்களுக்குள் அவுட்டானது 28 முறை!

72.2008ம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், சச்சினுக்கு சர் பட்டம் கொடுக்க பரிந்துரைத்தார். ஆனால், வழங்கப்படவில்லை.

73.இதுவரை ஒருநாள் போட்டிகளில் 56 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ள சச்சின், இந்திய அணி தோற்றபோதும் 5 முறை இவ்விருதினைப் பெற்றுள்ளார்!

74.மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர் சச்சின். புட்டபர்த்தி சத்யசாயி பாபா கோயிலுக்கு அடிக்கடி போய்வருகிறவர். மேட்ச் இல்லாத காலங்களில், சச்சினை இந்தியாவின் பிரபலக் கோயில்களில் அடிக்கடி பார்க்கலாம்.

75.அண்மையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி கேட்டு, டுவிட்டர் இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்தார் சச்சின். குவிந்தது ஒரு கோடி!

76.‘சின்னப் பையன் வேணாம்ப்பா’ எனப் பலர் தடுத்தும் சச்சினை 1989ல் இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுத்தவர் ராஜ் சிங் துங்கர்பூர்!

77.‘கிரிக்கெட் மதமாக இருந்தால், சச்சின்தான் கடவுள்’ என்கிற வாக்கியம் கிரிக்கெட் உலகில் மிகப் பிரபலம். ஒருமுறை ஆஸி அணி முன்னாள் வீரர் மேத் ஹெடன் ஒரு பேட்டியில், ‘நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன், அவர் இந்திய அணியில் விளையாடுகிறார்’ என்றார்.

78.திரைப்படங்கள் பார்ப்பது சச்சினுக்குப்பிடித்த பொழுதுபோக்கு. அவருக்குப் பிடித்த நடிகர் அமிதாப்பச்சன்! படம் பார்க்க தியேட்டருக்குச் செல்லும்போது விக்கு வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் செல்வாராம்.

79.சச்சின் தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது பாகிஸ்தானுடன் என்பது தெரியும். அந்த மேட்ச்சில்இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தவர் யார் தெரியுமா? நம்மூர் ஸ்ரீகாந்த்!

80.எந்த நாட்டிற்கு விளையாடச் சென்றாலும் அதற்குமுன் தன்னுடைய குரு ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசி பெற்று விட்டுத்தான் செல்வார்.

81.மல்யுத்தம் என்றால், சச்சினுக்கு உயிர். இந்திய அணியில் புதிதாக நுழைந்தபோது திலீப் வெங்சர்க்கார், அங்கோலா, மனோஜ் பிராபகரோடெல்லாம் ஜாலியாக மல்யுத்தம் போட்டு ஜெயிப்பாராம். ‘அவருடைய கைகள் மிகவும் வலுவானவை’ என்று  ஒரு பேட்டியில் கூறுகிறார் திலீப் வெங்சர்க்கார்.

82.சச்சின் பேட்டிங்கில் மட்டுமல்ல, சமையலிலும் கில்லாடி. வீட்டில் இருக்கும்போது கத்திரிக்கா ரொட்டி, சப்ஜியெல்லாம் செய்து அசத்துவாராம்.

83.மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள, எப்போதும் சச்சின் காதுகளில் இசை ஒலித்துக்கொண்டேயிருக்கும். பாப் இசையும் கிஷோர் குமார் பாடல்கள் என்றாலும் உயிர்.

84.சச்சின் தன்னால் விளையாடவே முடியாத ஒரு பந்து வீச்சாளர் எனக் குறிப்பிடுவது, மறைந்த தென்னாப்ரிக்க அணியின் ஹன்சி குரோன்யேவையே!

85.சச்சினுக்கு இரண்டு முறை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இரண்டு முறையும் இந்தியா அதிகப் போட்டிகளில் தோல்வியடைந்தது. அந்தச் சமயத்தில், தானாகவே தன் கேப்டன் பதவியைத் துறந்தார் சச்சின்.

86.டான் பிராட்மேனின் 29 டெஸ்ட் சத சாதனையை சச்சின் முறியடித்தபோது, ஃபார்முலா ஒன் ஃபெராரி நிறுவனம் ரேஸ் சாம்பியன் மைக்கேல் சூமேக்கர் கையால், அதிநவீன கார் ஒன்றை பரிசளித்தது.

87.1999ல் சச்சினின் உருவம் பொறித்த 24 காரட் தங்க நாணயங்களை இந்தியாவின் கார்ப்பரேஷன் பேங்க் வெளியிட்டது.

88. சச்சினுடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் பள்ளி அணிக்காக கிரிக்கெட் ஆடி வருகிறார். அப்பாவைப்போல இல்லாமல், இவர் ஒரு ஆல்ரவுண்டர். இடது கை ஆட்டக்காரர்!

89. சச்சினின் ரத்தத்துளியில் அச்சிடப்பட்ட (ஒரு துளிதான்) அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் ஒன்றை, இங்கிலாந்து பதிப்பகம் வெளியிட்டது. அதில் சச்சினின்டிஎன்ஏ வடிவமும் வெளியிடப் பட்டது. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி, ஒரு புத்தகத்தின் விலை முப்பது லட்சம் ரூபாய்! இந்தப் பணம் இந்தியாவில், ஏழைகளுக்கான பள்ளி ஒன்றைக் கட்ட செலவிடப்பட்டது.

90.சச்சின் வசித்த காலனியின் வாட்ச்மேன் பையன் ரமேஷ். சச்சினின் இளம் வயதுத் தோழன். இருவரும்தான் எப்போதும் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். இப்போது அவர்தான் சச்சினின் பர்சனல் செக்ரட்டரியாக இருக்கிறார். இப்போதும் நண்பர்களாக!

91.சொந்த வீட்டுக் கனவு  அனைவருக்கும் உண்டு. மும்பையிலிருக்கும் பாந்த்ராவில் அண்மையில் சச்சின்,5 அடுக்குகள் கொண்ட 40 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தன் புதிய வீட்டில் குடியேறினார்.

92.சச்சின் விளையாடுவதை கிரவுண்டிற்குச் சென்றோ, டி.வி.யிலோ லைவ்வாகப் பார்க்க மாட்டாராம் அவருடைய அண்ணன் அஜித். ரெக்கார்ட் செய்துதான் பார்ப்பது வழக்கமாம்! அவர் பார்த்த ஆட்டங்களில், சச்சின் சரியாக ஆடுவதில்லை என இப்படி ஒரு நம்பிக்கை!

93.மும்பையில் மேட்ச் நடந்தால், போட்டிக்கு முன்னால் தன் வீட்டுக்குச்சென்று, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்ற பின்பே ஆட்டத்திற்கு கிளம்புவார் சச்சின்.

94. டெல்லியின் முக்கியப் பகுதியான சாந்த்னி சவ்க்கில், ஒரு சாலைக்கு சச்சின் பெயர் சூட்ட பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

95. ‘கொலவெறி’ பாடல் ஹிட்டான கையோடு நடிகர் தனுஷை அழைத்து, அதே பாணியில் சச்சினுக்கும் ஒரு பாட்டு போட்டு ஹிட்டடித்தது பூஸ்ட் நிறுவனம்! அது சச்சின் ஆன்த்தம் (கீதம்) என அழைக்கப்பட்டது.

96.2008ம் ஆண்டு, பத்ம விபூஷன் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு, பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், விருது தரப்படவில்லை.

97.ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன், உலக அளவில் டாப் 50 கிரிக்கெட் வீரர் பட்டியல் ஒன்றை உருவாக்கினார். அதில் சச்சினுக்கே முதலிடம்.

98.சச்சினுக்கு புகைப்பழக்கமோ, குடிப்பழக்கமோ கிடையாது. அதோடு சிகரெட், குடி மாதிரியான விளம்பரங்களிலும் நடிப்பதில்லை.

99.20 கோடி ரூபாய் தருவதாகக் கூறிய ஒரு பீர் கம்பெனியின் ஆஃபரை வேண்டாம் என நிராகரித்தார் சச்சின். காரணம், ‘என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்... அவர்களை தீய பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்’ என்றார்.

100.ஆண்டுதோறும் 200 குழந்தைகளின் கல்விக்கு, ‘அப்னாலயா’ என்னும் அமைப்பின் மூலமாக உதவி வருகிறார் சச்சின்.



[Read More...]


0 AIEEE நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ்






என்.ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு பொறியியல் கல்வி நிலையங்களில் 40 ஆயிரம் இடங்களுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வை எழுத இருக்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் சில யோசனைகள்....

நாட்டில் உள்ள முக்கியப் பொறியியல் கல்வி நிறுவனங்களான என்ஐடி எனப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ஐஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற கல்வி நிறுவனங்களிலும் சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் சேருவதற்கு அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வை (ஏஇஇஇ) எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வை மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்துகிறது. இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் முதல் தாளை எழுத வேண்டும். பி.ஆர்க்., பி.பிளான், பில்டிங் டெக்னாலஜி, இன்டீரியர் டிசைன் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இரண்டாவது தாளை எழுத வேண்டும். இந்த இரண்டு பிரிவுப் படிப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்கள் இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத வேண்டும். மாணவர்கள் விரும்பினால் ஆன்லைன் தேர்வை எழுதலாம் அல்லது எழுத்துத் தேர்வை எழுதலாம்.

இந்த ஆண்டு ஆன்லைன் தேர்வு விரிவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையிலும் மற்ற மாநிலங்களில் 21 நகரங்களிலும் ஆன்லைன் தேர்வு மட்டுமே நடத்தப்படும். பழைய முறையிலான எழுத்துத் தேர்வு (ஆஃப் லைன்) தமிழ்நாட்டில் கோவையிலும் மதுரையிலும் மற்ற மாநிலங்களில் 61 நகரங்களிலும் நடத்தப்படும். அத்துடன் துபாய், ரியாத் ஆகிய இடங்களிலும் இத்தேர்வை எழுதலாம். “இந்த நுழைவுத் தேர்வின் இரண்டு தாள்களிலுமே இந்த ஆண்டில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வினாத்தாளின் அமைப்பிலும் மாற்றம் இல்லை. முதல் தாளில் கணிதம், இயற்பியல், வேதியியல் பகுதி ஒவ்வொன்றிலும் 30 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். கடந்த ஆண்டில் காம்பிரிஹென்சன் அல்லது மேட்சிங் வகை கேள்விகள் கேட்கப்படவில்லை. ஸ்டேட்மெண்ட் - ரீசன் வகையில் மட்டும் இயற்பியலில் மூன்று வினாக்களும் கணிதத்தில் ஐந்து வினாக்களும் இருந்தன. இந்த முறையும் அப்படியே இருக்கலாம். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் பிரிவின் முன்னாள் இயக்குநர் ப.வே. நவநீதகிருஷ்ணன்.

“கடந்த ஆண்டில் கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்க்கலாம். அனலிட்டிக்கல் ஜாமெட்ரியில் 6 கேள்விகள், புராபிலிட்டி மற்றும் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், டிபரன்சியல் ஈக்குவேஷன் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்று வீதம் ஆறு கேள்விகள். பங்ஷன்ஸ் அண்ட் ரிலேஷன்ஸ், காம்ப்ளக்ஸ் நம்பர்ஸ், வெக்டர்ஸ் இன்டகிரேஷன் அண்ட் அப்ளிக்கேஷன் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் இரண்டு வீதம் எட்டுக் கேள்விகள் கேட்கப்பட்டன. கன்டினியுட்டி, லிமிட்ஸ் மேட்ரிக்ஸ், சீரிஸ், டிரிகிரினாமெட்ரி, டிபரன்சியேஷன் அண்ட் அப்ளிக்கேஷன்ஸ், பெர்முட்டேஷன் அண்ட் காம்பினேஷன்ஸ், பய்நாமியல் எக்ஸ்பேஷன், சிஸ்டம் ஆஃப் லீனியர் ஈக்குவேஷன், மேத்தமேட்டிக்கல் ரீசனிங் ஆகியவற்றில் தலா ஒரு கேள்வி வீதம் பத்து கேள்விகள் கேட்கப்பட்டன. பாடத்திட்டத்தின் பகுதி முக்கியத்துவம் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடலாம்” என்கிறார் அவர்.

“ பிஆர்க் உள்ளிட்ட பாடங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு இரண்டாம் தாளில் பகுதி ஒன்றில் கணிதத்தில் 30 அப்ஜெக்ட்டிவ் வகைக் கேள்விகள் இருக்கும். ஆப்டிட்யூட் தேர்வுப் பகுதியில் 50 ஆப்ஜெக்ட்டிவ் கேள்விகள் இருக்கும். இதில் எழுதுவது, தீட்டுவது  அனைத்தையும் பால் பேனாவால்தான் எழுத வேண்டும். பகுதி மூன்றில் டிராயிங் தேர்வில் இரண்டு கேள்விகள் இருக்கும். பகுதி ஒன்றில் கணிதப் பாடப்பிரிவின்கீழ் கடந்த ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகள் எதிலிருந்து என்பதைப் பார்க்கலாம். அனலிட்டிக்கல் ஜாமெட்ரியில் 6 கேள்விகளும் இன்டகிரேஷன் அண்ட் அப்ளிக்கேஷனில் 4 கேள்விகளும் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அண்ட் புராபபிலிட்டி, ரிலேஷன்ஸ், டிரிகினாமெட்ரி ஆகியவற்றில் தலா 2 கேள்விகள் வீதம் 6 கேள்விகளும் கேட்கப்பட்டன. பெர்முட்டேஷன் மற்றும் காம்பினேஷன், டிபரன்சியலிபிட்டி, மேட்ரிக்ஸ், குவாட்ரட்டிக் ஈக்குவேஷன்ஸ், பய்நாமியல் எக்ஸ்பேன்ஷன், காம்ப்ளக்ஸ் நம்பர்ஸ், அல்ஜிப்ரா, பங்ஷன்ஸ், லிமிட்ஸ், டிட்டர்மினன்ட்ஸ், வெக்டர்ஸ், சிஸ்டம் ஆஃப் ஈக்குவேஷன்ஸ், அப்ளிக்கேஷன் ஆஃப் டிஃப்ரன்சியேஷன், டிபரன்சியல் ஈக்குவேஷன்ஸ் ஆகியவற்றில் தலா ஒரு கேள்வி வீதம் 14 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த ஆண்டும் இதையொட்டியே கேள்விகள் இருக்கலாம் அல்லது சிறிது மாறுபடலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இரண்டாம் தாளில் பகுதி இரண்டில் கொடுக்கப்பட்ட 3-டி பட உருவத்தின் பக்கங்களின் எண்ணிக்கை காணலில் 5 வினாக்கள் இருக்கும். படத் தொடரை முடித்தலில் 3 வினாக்களும், 3டி பட உருவத்தின் முன்பக்கத்தைக் காணலில்  7 வினாக்களும், 3டி பட உருவத்தின் மேல் பக்கத்தைக் காணலுக்கு 5 வினாக்களும், தரப்பட்ட சமதளப் படத்தில் உள்ள முக்கோணங்களின் எண்ணிக்கை காணலுக்கு 2 வினாக்களும், படத்தின் கண்ணாடி பிரதிபலிப்பை காணுதலுக்கு 3 வினாக்களும், படத்தில் சதுரங்களை எண்ணுவதற்கு ஒரு வினாவும் கேட்கப்பட்டன. பொருந்தாத படத்தைக் குறித்தலில் 2 வினாக்களும் மறைந்திருக்கும் ஒரேமாதிரி உருவத்தை காணலில் 2 வினாக்களும் 3டி உருவத்தின் திறந்த படத்தைத் தேர்ந்தெடுத்தலில் 3 வினாக்களும்  மேல் பக்கத்திலிருந்து முழு உருவத்தையும் தேர்ந்தெடுத்தலுக்கு 2 வினாக்களும்  அப்ஜெக்ட்டிவ் முறையில் மொத்தம் 35 வினாக்கள் இந்தப் பகுதியில் இடம் பெறும். ஆக்கிடெக்ச்சர், பில்டிங் மெட்டிரியல்ஸ், லைட், சவுண்ட், வாட்டர் வேஸ், ஹீட் அண்ட் ரேடியேஷன் பை பில்டிங்ஸ், புராபர்ட்டிஸ் ஆஃப் ஆர்க்கிடெக்ச்சுரல் மெட்டீரியல்ஸ், ஆர்க்கிடெக்ட்ஸ் ஆகியவை குறித்து 15 வினாக்கள் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். மூன்றாவது பகுதியில் இரு டிராயிங் கேள்விகளும் இருக்கும் என்று இந்தத் தேர்வு முறையில் உள்ள முக்கிய அம்சங்களை விளக்கினார் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன்.

“நுழைவுத் தேர்வைப் பொருத்தவரை இந்தப் பாடம் முக்கியம், இது முக்கியமல்ல என்று சில பாடங்களை விட்டு விட்டுப் படிக்கக்கூடாது. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உள்ள அடிப்படைக் கோட்பாடுகளையும் விவரங்களையும் நன்கு படிப்பதுடன் அதன் பயன்பாடுகளைப் பொருத்திப் பார்க்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓராண்டில் குறிப்பிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். அதேபோல மற்ற ஆண்டுகளிலும் அந்தப் பாடங்களுக்கு அதே அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்வுகளில் கேட்கப்படும் கணிதம் தொடர்பான வினாக்களுக்கு விரைவில் சரியாக பதில் அளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். யூகத்தின் அடிப்படையில் பதில் எழுத முயற்சிப்பது நல்லது அல்ல. இந்தத் தேர்வில் நான்கு வகைக்கு குறையாமல் உள்ளடக்கம் மாற்றி அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்கள் பயன்படுத்தப்படும். எனவே, காப்பி அடித்தல் சபலமே எந்த மாணவருக்கும் வரக்கூடாது” என்கிறார் அவர்.

“ஆன்லைன்  தேர்வு முறையில் தேர்வு எழுதும் மாணவர்கள் கம்ப்யூட்டரில் நல்ல பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளை எழுதி தங்களை இந்தத் தேர்வு முறைக்கு நன்கு பரிச்சயப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த ஆன்லைன் தேர்வை எளிதாக எழுதி விட முடியும். பி.ஆர்க். உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இரண்டாம் தாளை எழுதும் மாணவர்கள் கணிதப் பாடத்தில் காட்டும் அக்கறையை படங்களை வரைவதில் உள்ள திறனை மேம்படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். கோச்சிங் மையங்களுக்குச் சென்று பயிற்சி பெறுபவர்கள் வீட்டிலும் பாடங்களில் கவனம் செலுத்துங்கள். வீட்டிலேயே படிக்கும் மாணவர்கள், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடமோ சக மாணவர்களிடமோ கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.

பாடங்களைப் படித்திருந்தாலும்கூட, விடைகளைக் கண்டறிய பல்வேறு வழிமுறைகளை யோசித்து பயிற்சி செய்து பாருங்கள். இதுபோன்ற பயிற்சித் தேர்வில் குறித்த நேரத்தில் விடைகளைக் கண்டறிய உதவியாக இருக்கும். மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்ப்பது ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். தெரியாத கேள்விகளுக்கு அதிக நேரத்தைச் செலவிடக்கூடாது. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை அளித்து விட்டு, பிறகு தெரியாத கேள்விகளுக்கு விடை அளிக்க முயலலாம்” என்கிறார்கள் சில கல்வியாளர்கள். நன்றாகப் படியுங்கள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். வெற்றி நிச்சயம்!

நன்றி :புதியதலைமுறை






[Read More...]


0 ஜென் தத்துவக்கதைகள் 6





அப்படியா?
ஜென் குருவான ஹகுயின் எல்லோராலும் தூய்மையானவர் என்று புகழப்பட்டு
பெரிதும் மதிக்கப்படுபவர். ஜப்பானிய அழகி ஒருத்தி அவர் வாழும் இடத்திற்கு அருகில் உணவு விடுதி வைத்திருந்த தம்பதிகளுக்கு ஒரே புதல்வி. திடீரென்று ஒரு நாள் அவள் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்ட பெற்றோர் திகைத்தனர். கோபம் மேலிட இதற்குக் காரணமானவன் யார் என்று பெற்றோர் அவளைக் கேட்டனர். பதில் வரவில்லை. உடனே மிகவும் அவளை வற்புறுத்தவே அவள் ஹகுயின் பெயரைக் கூறினாள். கோபமடைந்த பெற்றோர் ஹகுயினை அணுகிக் கத்தினர்.

"அப்படியா?" என்றார் ஹகுயின்.

குழந்தை பிறந்தவுடன் அதை ஹகுயினிடம் கொண்டு வந்து விட்டனர் பெண்ணின்
பெற்றோர். அவரது நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்பட்டது. அதைப் பற்றி அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. குழந்தையைச் சீராட்டி நன்கு வளர்க்க ஆரம்பித்தார். அண்டை அயலாரிடம் பால் வாங்கி குழந்தைக்குக் கொடுத்து வரலானார்.

ஒரு வருடம் கழிந்தது. குழந்தையின் தாயான அந்தப் பெண்ணால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை. மீன் சந்தையின் மீன் விற்பனை செய்யும் இளைஞன் ஒருவனே குழந்தையின் தகப்பன் என்று அவள் உண்மையைப் பெற்றோரிடம் கூறினாள். உடனே பெண்ணின் பெற்றோர் குழந்தையைத் திரும்பப் பெற வேண்டி ஹகுயினிடம் விரைந்தனர். குழந்தையைத் திருப்பித் தர ஹகுயின் இசைந்தார்.

தங்கள் செயலுக்கு மன்னிப்பு அளிக்குமாறு அவரைப் பெண்ணின் பெற்றோர் மன்றாடிக் கேட்டுக் கொண்டு குழந்தையின் தந்தை யார் என்பதையும் கூறினர்.
ஹகுயின் கூறினார்: "அப்படியா?"

[Read More...]


0 ஜென் தத்துவக்கதைகள் 5





மாணவன் ஒருவன் வேலை நிமித்தமாக பக்கத்து ஊருக்குப் பயணப்பட்டான். பயணத்தில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றில் வெள்ளம் சுழித்துச் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அகண்ட ஆறு அது. ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்று கொண்டிருந்தான். ஆற்றின் அக்கறையில் துறவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டான் மாணவன், “ஐயா... நான் ஆற்றின் அக்கரைக்கு வருவது எப்படி?’’
குரு சத்தமாகச் சொன்னார்.. மகனே... நீ ஆற்றின் அக்கறையில்தான் இருக்கிறாய்...

விழித்திறன் அற்ற ஒருவன் தன்னுடைய நண்பனைப் பார்க்க பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தான். பேசிக் கொண்டே இருந்தார்கள். மாலை வரை பேசிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் துவங்கியது. நண்பன் தன்னுடைய விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
“இருட்டி விட்டது. இதற்கு மேல் எங்கே போகிறாய்? காலையில் போய்க் கொள்ளலாம் என்றான்.

எனக்குப் பகல் இரவு எல்லாம் ஒன்றுதான். ஒளி என்ன, இருள் என்ன இரண்டும் ஒன்றுதான்   கவலைப்பட வேண்டாம் என்றான் நண்பன்.
எதற்கும் இதை நீ எடுத்துக் கொண்டு போ என்று ஒரு லாந்தர் விளக்கை நண்பனிடம் கொடுத்தான்.

இது எனக்கு எந்த வகையில் பயன்படும்? நான் போய்க் கொள்கிறேன் என்றான்.
உனக்குப் பயன்படவில்லை என்றாலும் இருட்டில் பார்வை உள்ளவர்கள் உன்மீது மோதிக் கொள்ள மாட்டார்கள் இல்லையா? அதற்காக எடுத்துக் கொண்டுபோ என்று வலியக் கொடுத்து அனுப்பினான் நண்பன்.

லாந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு காட்டு வழியே பார்வையற்றவன் போய்க் கொண்டிருந்தான். பின்னால் இருந்து குரல் கேட்டது..
ஐயா எங்கே போகிறீர்கள்? கையில் விளக்கு இருக்கிறதே... உனக்கும் தெரியவில்லையா என்று ஆச்சரியத்துடன் கேட்டான் பார்வையற்றவன்.
லாந்தரில் பொருத்தப்பட்ட மெழுகுவர்த்தி தீர்ந்து விட்டது சகோதரனே... என்றான் பின் தொடர்ந்து வந்த அந்த வழிப்போக்கன்.

[Read More...]


 

Unlocking Tools

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets