தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் 10,718 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணிகளில் சேர எஸ்எஸ்எல்சி படித்திருந்தால் போதும். இதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், வரி தண்டலர் (பில் கலெக்டர்), தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்-நிலை-3, நில அளவர் (ஃபீல்ட் சர்வேயர்), வரைவாளர் (டிராப்ட்ஸ்மேன்) ஆகிய பணிகளில் உள்ள 10,718 காலிப் பணி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுகளை நடத்துகிறது.
இந்தத் தேர்வை எழுத விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெறாதவர்கள் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது. தட்டச்சர் பணிக்கு அரசு தொழில்நுட்ப தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-3 பணிக்கு அரசுத் தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலையில் தேர்ச்சி முதுநிலையில் தேர்ச்சிக்குச் சமமானதாகக் கருதப்படாததால் இடைநிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இடத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
கம்ப்யூட்டர் தகுதி (தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையில் வழங்கப்படும், Certificate course in Computer on office Automation’ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கம்ப்யூட்டர் தகுதியைப் பெறாத விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால், அவர்களின் தகுதிகாண் பருவத்திற்குள் மேற்குறிப்பிட்ட கம்ப்யூட்டர் தகுதியைப் பெற வேண்டும். நில அளவர் பணியைப் பொருத்த அளவில் அனைத்துத் தகுதிகளும் சமமாக இருக்கும் பட்சத்தில் தொழில் பயிற்சி நிலையத்தில் நில அளவர் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்துக் காலிப் பணியிடங்களிலும் 20 சதவீத இடங்கள், தமிழ் வழியில் படித்தவர்களைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்தத் தேர்வை எழுத விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18. ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள்) 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்றவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் உள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் அவர்களது அதிகபட்ச வயது 35க்குள் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டவகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள்) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதியைக் காட்டிலும் மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருந்தால் அதாவது புதுமுக வகுப்பு, மேல்நிலைப் பள்ளி, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. மாநில, மத்திய அரசுப்பணிகளில் முறையாக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஏனையோர் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்க முடியாது. டான்சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஆட்குறைப்புக்கு உள்ளான தொழில்நுட்பத் தகுதியுள்ள மற்றும் தொழில்நுட்பத் தகுதியில்லாத பணியாளர்கள், அரசு, கழகங்கள் மற்றும் அரசின் ஆளுகைக்குட்பட்ட நிறுவனங்களில் இதுவரை பணியில் அமர்த்தப்படாமல் இருப்பவர்கள் இந்தப் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு தவிர அனைத்துத் தகுதிகளும் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு வயது வரம்பை அரசு தளர்த்தும்.
அறிவிக்கப்பட்ட காலிப் பணி இடங்களின் எண்ணிக்கை தோராயமானது. காலி இடங்களின் நிலைமைக்கு ஏற்ப எந்த நேரத்திலும் காலி இட மதிப்பீட்டில் மாறுதல் இருக்கலாம். தகுதி வாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கிடைக்காவிட்டால் அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட காலி இடங்கள் அதே பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும். இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின்கீழ் வரும் காலிப் பணி இடங்களுக்கு இந்து சமயத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் இல்லாத நிலையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட காலிப் பணி இடங்கள் நடைமுறையில் உள்ள விதிகளின்படி நிரப்பப்படும். ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் நிரப்பப்பட்ட பிறகும் (அவ்வகுப்பைச் சேர்ந்தவர்களில்) தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இருந்தால் அந்த விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டிலும் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள். அருந்ததியர்களுக்காக ஒதுக்கப்பட்ட காலிப் பணி இடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கிடைக்காத நிலையில், அந்தப் பணி இடங்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
இந்தப் போட்டித் தேர்வு எப்படி இருக்கும்?
இத்தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். வினாத்தாளில் இரண்டு பிரிவுகள் இருக்கும். அதாவது பொது அறிவுப் பிரிவில் 100 வினாக்கள் கேட்கப்படும். அடுத்த பிரிவில் பொதுத் தமிழிலோ அல்லது பொது ஆங்கிலத்திலோ 100 கேள்விகள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றுக்குப் பதிலளிக்க வேண்டும். பொது அறிவு வினாத்தாள், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பொதுத் தமிழ் வினாத்தாள் தமிழிலும் பொது ஆங்கில வினாத்தாள் ஆங்கிலத்திலும் இருக்கும். இதற்கான பாடத்திட்டம் குறித்த விவரங்கள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அண்மையில் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பங்களை ஸ்கேன் செய்து அதன் நகல்களை சிடி அல்லது பென் டிரைவ் போன்றவற்றில் தயாராக வைத்திருக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பத்தைப் பதிவு செய்ய சரியான இ-மெயில் முகவரியோ அல்லது மொபைல் போன் எண்ணோ அவசியமானது. இ-மெயில் முகவரி பயன்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை மற்றும் குறிப்பாணை போன்றவை விண்ணப்பதாரர்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பிக்கும் பதவி, இனம், பிறந்த நாள், முகவரி, இ-மெயில் முகவரி, தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இறுதியானதாகக் கருதப்படும். இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளுக்குப் பிறகு, எந்தவித மாறுதலும் செய்ய அனுமதி கிடையாது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் முக்கிய விவரங்களை பின்னர் மாற்ற முடியாது என்பதால் விண்ணப்பத்தை நிரப்பும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும். குறுஞ்செய்தி மூலம் தகவல்களைப் (எஸ்எம்எஸ்) பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை அணுகி ‘அப்ளை ஆன்லைன்’ என்ற பகுதியை ‘கிளிக்’ செய்தால் ஆன்லைன் விண்ணப்பம் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவி அல்லது பணித் தொகுதியைத் தேர்வு செய்யவும். ஏற்கெனவே நிரந்தரப் பதிவு முறையின் (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்) மூலம் பிரத்யேக எண் பெற்றிருந்தால் அந்த எண்ணையும் கடவுச் சொல்லையும் (பாஸ்வேர்டு) பதிவு செய்து ஏற்கெனவே உள்ள விவரங்களைக் காணவும். தேவையானால் தகுந்த மாறுதல் செய்யலாம். நீங்கள் ஏற்கெனவே பதிவு செய்து பிரத்யேக எண்ணைப் பெற்றிருக்காவிட்டால் தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தையும் கையெழுத்தையும் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் மற்றும் கையெழுத்து இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அனைத்துப் பணிகளுக்கும் தேர்வுக் கட்டணம் ரூ.75. விண்ணப்பக் கட்டணம் ரூ.50. அதாவது மொத்தக் கட்டணம் ரூ.125. தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு கோரும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவக் கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கெனவே பதிவு செய்து 50 ரூபாய் பதிவுக் கட்டணமாகச் செலுத்தி பதிவு எண் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், 5 ஆண்டுகளுக்கு தேர்வாணையம் அறிவிக்கும் எந்தப் பணிக்கும் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்தலாம். இதற்காக இணைய தளத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றிக் கட்டணத்தைச் செலுத்தவும். கட்டணம் தொடர்பான விவரங்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் நிரப்பிய உடன் செர்வரிலிருந்து தகவல் வரும் வரை காத்திருக்கவும். இரட்டிப்பாக பணம் செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில் பேக் (back) அல்லது ‘ரெப்ரஷ்’ பட்டனை அழுத்த வேண்டாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து முடித்ததும் ஒரு பதிவு எண்ணும் கடவுச் சொல்லும் (பாஸ்வேர்டு) வழங்கப்படும். எதிர்கால தொடர் பயன்பாட்டுக்காக இவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நேரடியாகக் கட்டணம் செலுத்த விரும்பும் விண்ணப்ப தாரர்கள் குறிப்பிட்ட அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கிக் கிளைகளில் செலுத்தலாம். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பதிவு எண்ணும் பாஸ்வேர்டும் வழங்கப்படும். இதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடன் தோன்றும் செலுத்துச் சீட்டை (செலான்) பிரிண்ட் அவுட் எடுத்து அருகில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைக்கோ அல்லது குறிப்பிட்ட அஞ்சலகத்திற்கோ சென்று கட்டணத்தைச் செலுத்தவும். பின்னர், செலானை வாங்கி , அதில் கையெழுத்து இடப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். டிரான்ஸாக்ஷன் எண், வங்கிக் கிளையின் பெயர், டி.பி. குறியீட்டு எண், பணம் செலுத்திய நாள் ஆகியவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யவும். ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு வேலை நாட்களுக்குள் அஞ்சலகத்திலோ அல்லது இந்தியன் வங்கியிலோ கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே விண்ணப்பதாரரின் விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படும்.
தேவைப்பட்டால், பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவோ பிரிண்ட் அவுட் எடுக்கவோ முடியும். விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் பிரிண்ட் அவுட்டையோ அல்லது தொடர்புடைய ஆவணங்களையோ தேர்வாணையத்துக்கு அனுப்பத் தேவையில்லை. விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத்துக்கு தகுதி பெறும் நிலையில் மட்டுமே அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது. விண்ணப்பதாரர்கள் தனியே இ-மெயில் முகவரி வைத்திருக்க வேண்டும். அத்தகைய இ-மெயில் முகவரி இல்லாத விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிப்பதற்கு முன்பாக தங்களுக்கு என தனியே ஒரு இ-மெயில் முகவரியை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் மாறுதல்கள் செய்ய வேண்டி இருந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ளும் வகையில் ஆன்லைன் விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பத்தில் மாறுதல் எதுவும் செய்ய வேண்டியதிருந்தால் பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் வரை மாறுதல் செய்துகொள்ளலாம். இறுதி நாளுக்குப் பிறகு எத்தகைய மாறுதல்களும் செய்ய இயலாது. தேர்வுக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணங்கள் குறித்த விவரங்களை அதற்குரிய கட்டத்தில் கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். அதில் மாறுதல் செய்யவோ திருத்தவோ முடியாது. விண்ணப்பத்தில் உள்ள அனைத்துக் கட்டங்களையும் பூர்த்தி செய்த பிறகு, அனைத்தையும் சரியாகப் பூர்த்தி செய்திருக்கிறோமா என்று பார்த்த பிறகே சப்மிட் என்ற பொத்தானை இறுதியாக அழுத்த வேண்டும். தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு, வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 1860 345 0112 என்ற கட்டணமில்லா சேவை உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கும் வசதிச் சேவை மே 28ம் தேதி இரவு 11.59க்கு நிறுத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் செயல் அலுவலர் கிரேடு-4 பணிக்கு குரூப்-8 தேர்வு மூலம் 75 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தொகுதி-4 மற்றும் தொகுதி-8 ஆகிய இரு தொகுதிகளிலும் அடங்கிய பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பதாரர்கள் ஜூலை 7ஆம் தேதி முற்பகலில் நடைபெறும் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தாள் தேர்வை எழுதுவதோடு அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறும் இந்து மதத்தாள் தேர்வையும் எழுத வேண்டும். இவ்வாறு இரண்டு தேர்வுகளையும் எழுதியவர்கள் மட்டுமே தொகுதி-4 மற்றும் தொகுதி-8 ஆகியவற்றுக்கான பணிகளுக்கு பரிசீலனை செய்யப்படுவார்கள். தொகுதி-8 தேர்வுக்கு மட்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100. தொகுதி-4 மற்றும் தொகுதி-8 ஆகிய இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பவர்களுக்குக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தைப் பார்த்து முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியில் சேருவதில் ஆர்வமிக்கவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28-05-2012
வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 30-05-2012
தேர்வு நடைபெறும் நாள்: 07-07-2012
விவரங்களுக்கு: www.tnpsc.gov.in, www.tnpscexams.net
நன்றி : புதிய தலைமுறை


.jpg)





